மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Monday, September 28, 2015

தியாகத் திருநாள் !

தியாகத் திருநாள் ! 



விடிந்த இத்திருநாள் - தியாகத்தின்
வைகறைப் பிரவாகத்தின் பெருநாள் !

வல்லவன் சமிக்ஞையால்
சொல்லொணா அன்பின் மகவை
கல்போன்ற இறைநேச வலிமையால்
பலியிடச் சென்றநாளின் நினைவு !

இறைவனின் மேல்
கரையற்ற அன்பு
திரையற்ற சமுத்திரமாய்
வரையற்ற சோகம் தாய்க்கு !

அன்னை ஹாஜிராவின் துக்கம்
அருமைமகன் இஸ்மாயிலின் பக்கம்
அறுத்திடக் கத்தியும் மினுக்கம்
அருமைநபிகளின் இறையன்பின் செருக்கம் !

அன்பே உருவான இறைவன்
ஆணையிட்டான் ஆட்டின் பலியை
அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ்
அறிந்து அவனிடம் பணிந்திடும் நாள் !

இறைநேசர் தியாக வலிமையின் முன்
இறையின் நேசத்தில் விரிந்த பெருநாள்!
அன்பின் ஆழத்தை அகிலம் உணர்ந்திட
பண்பால் போற்றிடும் தியாகத் திருநாள் !

Friday, May 1, 2015


உழைப்பாளர் தினம் !

மேன்மைமிக்க
‘மே’ தின வாழ்த்துக்கள் !

உழைப்பின் வியர்வை
உலகத்தின் உயர்வை
உன்னிடம் தேடும்
உன்னதம் ‘மே’ தினம் !

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனம்
உண்மை உழைப்பின்
நந்தவனம் !

சேற்றை மிதிக்கும்
உழவன் கால்கள்
சோற்றில் கைவைக்க்
உதவும் வடிகால்கள் !

சேறு மிதிபடா விட்டால்
சோறு கைதொடாது  !


உழைப்பால்
வெளியாகிறது வியர்வை !
ஒளியாகிறது உலகம் !
  
மேன்மைமிக்க
‘மே’ தின வாழ்த்துக்கள் !

அன்பன்

மு. பஷீர்

Wednesday, December 17, 2014

'பாலைப் பூக்கள்' கவிதை நூல் - இரண்டு வருடங்கள்

'பாலைப் பூக்கள்' கவிதை நூல் வெளியிட்டு  இரண்டு வருடங்கள் ஆகின்றன. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இதன் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சிறப்பாக நடந்தேறிய னிகழ்வு இன்றும் நினைவுகளாய் பதிந்து ஈரமாய் இனிக்கிறது.
கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமையில், முனைவர்.வெ.இறையன்பு அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு ஆற்றிய மதிப்புரை இன்றும் மணம் வீசுகிறது. முனைவர்.சுந்தர ஆவுடையப்பன், முனைவர்.அப்துசமது, கேப்டன் அமீரலி, பதிப்பாளர் ஷாஜஹான், ஹாமீம் முஸ்தபா, ஆர்னிகா நாசர், கவிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் என அவை நிறைய தமிழ் நிறைந்து மலர்ந்திருந்த காட்சிகள் மனதுக்குள் இன்றளவும் மிளிரும் மத்தாப்பு !

அடுத்த ஆண்டில் அடுத்த படைப்பை வெளிக்கொணர வேண்டும் எனும் அவாவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இறைவன் நாடட்டும் !
அன்பன். மஸ்கட் மு. பஷீர்
http://www.youtube.com/watch?v=mFV0tSjlCZU

Saturday, August 2, 2014

‘அகம் நிறைந்த அமீரகப் பயணம்’ - பாலைப் பூக்களின் அறிமுகமும், பின்னூட்ட நிகழ்வுகளும்

‘அகம் நிறைந்த அமீரகப் பயணம்’ - பாலைப் பூக்களின் அறிமுகமும், பின்னூட்ட நிகழ்வுகளும்
‘ஈத் பெருநாள்’ விடுமுறையில் துபாய் சென்றிருந்தபோது, துபாய் வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேர் குடும்ப உறுப்பினர்கள் ஒரு சங்கம நிகழ்ச்சியை ‘துபாய் சிவஸ்டார் பவனில்’ ஏற்பாடு செய்திருந்தனர்.


எனது ‘பாலைப் பூக்கள்’ புத்தகத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வாக அமைந்திருந்த நிகழ்வில் வானலை வளர்தமிழ் - தமிழ்த் தேர் - அமைப்பின் தலைவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கலந்துகொண்டு கவிஞர் பஷீர் அவர்களுக்கு வரவேற்பு தந்தார்.  அமைப்பின் ஆலோசகர் கவிஞர் காவிரிமைந்தன் தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் கவிஞர்.ஜியாவுதீன்ஊடகவியலாளர் முதுவை.ஹிதாயத்துல்லாகவிஞர்.தஞ்சாவூரன்
கவிஞர் ஆதிபழனிகவிஞர் ஜெயராமன் ஆனந்திகவிதாயினி நர்கீஸ் பானு கவிதாயினி ஜெயா பழனிசெல்வி ஆனிஷா ஆகியோருடன் முக்கிய விருந்தினராக ‘காப்பியக்கோ’ கவிஞர் ஜின்னா ஷரிபுத்தீன் ஆகியோரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கவிஞர் ஜின்னா ஷர்புதீன் தமிழ்தேர் சார்பில் பொன்னாடை அணிவித்தார்.  நினைவுப் பரிசினை  தமிழ்த்தேர் தலைவர் கோவிந்தராஜ் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

என்னுடைய பாலைப்பூக்கள்” நூலும் காப்பியக்கோ ஜின்னா ஷர்புதீன்  எழுதிய எல்லாளன் காவியம்’ நூலும் அறிமுகப் படுத்தப் பட்டன.    நூல்களைப்பற்றி நூலாசிரியர்கள் சிறப்புரையாற்றினர்.   
கவிஞர் ஜியாவுதீன் தனது நன்றியுரையாற்றினார்.



அன்று மாலை காப்பியக் கவிஞர் ஜின்னா ஷர்புதீன் அவர்கள் இல்லத்தில் தமிழ்ப்படைப்பாளிகள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் என் இளமைக்கால நண்பர் பத்திரிக்கை புகைப்பட நிபுணர் குளச்சல் இப்ராகிம் அவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு’ – அஜ்மான் அமீரகத்தில்...!
ஜூலை 31-ஆம் தேதி இரவு ‘அஜ்மான் சிவஸ்டார் அரங்கில்’ வைத்து  ‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு.ஹசன் அஹமது அவர்கள் தலைமையில், செல்வி ஆனிஷா மற்றும் செல்வன்.பசிம் பஷீர் ஆகியோரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

கவிஞர்.காவிரிமைந்தன், கவிஞர். திண்டுக்கல் ஜமால், கவிதாயினி நர்கீஸ்பானு ஆகியோர் ‘பாலைப் பூக்கள்’ நூலுக்கு பின்னூட்டம் வழங்கிப் பேசினர். நான் நிறைவாக  நூல்  ஏற்புரை வழங்கினேன்.

‘தமிழ்த்தேர்’ பதிப்பாசிரியர்.கவிஞர். ஜியாவுதீன் வரவேற்புரை வழங்க, ஊடகவியலாளர்  முதுவை. ஹிதாயத்துல்லா முன்னிலை வகித்தார். செல்வன்.பசிம் பஷீருக்கு நன்றியுரை வழங்க வாய்ப்பளித்து சிறப்பித்தனர்.


மனதுக்கும்  நெஞ்சுக்கு நிறைவான இலக்கிய சுற்றுலாவாக இந்தப்பயணம் அமைந்தது. தமிழ் உறவுதான் உறவுகளில் எல்லாம் சிறந்தது என்பதற்கு இந்தப்பயணம் ஒரு சான்று என்றால் அதுமிகையாகாது.

அன்பின் நினைவுகளுடன்,
மஸ்கட் மு.பஷீர் மற்றும்
குடும்பத்தினர்கள்.        




Sunday, July 27, 2014

‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள்! EID MUBARAK TO ALL

‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள்!

நுண்ணறிவுக் கெட்டாத
விண்ணறிவிலும் கிட்டாத

இறைவனின் திகட்டாத
திரைவெண் ணவனருளை

திங்களொரு தினங்களிதில்
பொங்குமிருள் இரவுகளில்

கண்ணீரில் கரைத்திறைந்து
மண்ணிலும் விண்ணிலுமாய்

மகிழ்வெய்தி வாழ்வதற்காய்
முகில்கிழித்து வான்மதியாய்

வந்துசென்றது ‘ரமலான்’
விரிந்தது ‘ஈது’ மலராய் !

அனைவருக்கும் இனிய

‘ஈகைத்திருநாள்’ வாழ்த்துக்கள் !

அன்பன்; மஸ்கட் மு. பஷீர்


Saturday, June 28, 2014

மதிப்பிற்குரிய திரு.கி.வீரமணி அவர்களுடன் சந்திப்பு

 அண்மையில் மஸ்கட் வந்திருந்த மதிப்பிற்குரிய திரு.கி.வீரமணி அவர்களை நண்பர்களுடன் இனிதே சேர்ந்து சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர், பத்திரிக்கையாளார், சமூக ஆர்வலர், தொண்டுப் பணியில் தொடர்ந்து சளைப்பின்றி பணியாற்றிவருபவர், தமிழ் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர், அரசியல் கட்சியின் தலைவர் எனப் பல்முகங்கொண்ட சிறப்புகளுக்கு சொந்தக்காரரான திரு.கி.வீரமணி அவர்களின் சந்திப்பு வெகுநிறைவானதாகவும் பெருமைமிக்கதாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது,

தெளிந்த சிந்தனை வடிவம், கல்விப்பணியில் கடந்து வந்த பாதை, சமுதாயப் பயணத்தில் அவரின் அனுபவம், சமுதாயத்தின் மீதும், தமிழர்கள் மற்றும் தமிழ் மொழிமேல் கொண்ட ஆழ்ந்த பற்று, சிந்தனை மற்றும் அக்கறை என அவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை அப்படியே அள்ளிப்பருகி அமுதுண்ட மகிழ்ச்சி மனத்திலும், இதயத்திலும் நீங்காத நினைவலைகளின் எழுச்சி!.
என்னுடைய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூலைப் பெற்று இருதினங்களிலேயே அதனை மொத்தமும் ஆழ்ந்து படித்து, அதற்கொரு அழகுப் பின்னுட்டமும் தந்து, அதை ‘விடுதலை’ இதழிலேயே பதித்து வெளியிட்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். எத்தனையோ பணிகளுக்கிடையிலும் ஒரு புதுக்கவிஞனை – அதவும் என்போன்ற ஒரு புதிய கவிஞனை கவிஞனைத் தன் தூரிகையால் விமரிசித்து, வாழ்த்தி, மனதாரப் பாராட்டும் அவரின் இதுபோன்ற பண்புதான் அவரை தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் இன்னும் அரசாட்சி செய்ய வைத்திருக்கிறது….வைத்துக் கொண்டிருக்கிறது என் எண்ணுகிறேன்!.
அவரின் தமிழ்ப்பணியும், தொண்டும், கல்விப் பணியும் தொடர வேண்டும், மேன்மேலும் பணிசிறக்கவும் வெற்றிபெறவும் வேண்டும்..அவர் மூலம் தமிழும் தமிழ்ச்சமுதாயமும் ஒளிரவேண்டும்!!
அன்பன்
மஸ்கட். மு. பஷீர்.


Ramadan Wishes : ரமலான் வாழ்த்துக்கள்

ரமலான் பிறை ரம்மியமாய்;
நன்மையின் ஒளி 
இனி வளர்பிறையாய் !

பாவங்கள் எரியட்டும்-இறை
நாமங்கள் துதிக்கட்டும் !
படைத்தவனருள் சொரியட்டும் 

அனைவருக்கும் இனிய
ரமலான் நோன்புகால வாழ்த்துக்கள் !
அன்பன்
மு. பஷீர், மஸ்கட்

  
May this Ramadan bring in you  the 
most brightest and choicest happiness and love 
you have ever wished for.
May lights triumph over darkness.

Wish you a very happy Ramadan Mubarak

Mu. Basheer, Muscat

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது