மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Wednesday, December 17, 2014

'பாலைப் பூக்கள்' கவிதை நூல் - இரண்டு வருடங்கள்

'பாலைப் பூக்கள்' கவிதை நூல் வெளியிட்டு  இரண்டு வருடங்கள் ஆகின்றன. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இதன் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சிறப்பாக நடந்தேறிய னிகழ்வு இன்றும் நினைவுகளாய் பதிந்து ஈரமாய் இனிக்கிறது.
கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமையில், முனைவர்.வெ.இறையன்பு அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு ஆற்றிய மதிப்புரை இன்றும் மணம் வீசுகிறது. முனைவர்.சுந்தர ஆவுடையப்பன், முனைவர்.அப்துசமது, கேப்டன் அமீரலி, பதிப்பாளர் ஷாஜஹான், ஹாமீம் முஸ்தபா, ஆர்னிகா நாசர், கவிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் என அவை நிறைய தமிழ் நிறைந்து மலர்ந்திருந்த காட்சிகள் மனதுக்குள் இன்றளவும் மிளிரும் மத்தாப்பு !

அடுத்த ஆண்டில் அடுத்த படைப்பை வெளிக்கொணர வேண்டும் எனும் அவாவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இறைவன் நாடட்டும் !
அன்பன். மஸ்கட் மு. பஷீர்
http://www.youtube.com/watch?v=mFV0tSjlCZU

Saturday, August 2, 2014

‘அகம் நிறைந்த அமீரகப் பயணம்’ - பாலைப் பூக்களின் அறிமுகமும், பின்னூட்ட நிகழ்வுகளும்

‘அகம் நிறைந்த அமீரகப் பயணம்’ - பாலைப் பூக்களின் அறிமுகமும், பின்னூட்ட நிகழ்வுகளும்
‘ஈத் பெருநாள்’ விடுமுறையில் துபாய் சென்றிருந்தபோது, துபாய் வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேர் குடும்ப உறுப்பினர்கள் ஒரு சங்கம நிகழ்ச்சியை ‘துபாய் சிவஸ்டார் பவனில்’ ஏற்பாடு செய்திருந்தனர்.


எனது ‘பாலைப் பூக்கள்’ புத்தகத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வாக அமைந்திருந்த நிகழ்வில் வானலை வளர்தமிழ் - தமிழ்த் தேர் - அமைப்பின் தலைவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கலந்துகொண்டு கவிஞர் பஷீர் அவர்களுக்கு வரவேற்பு தந்தார்.  அமைப்பின் ஆலோசகர் கவிஞர் காவிரிமைந்தன் தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் கவிஞர்.ஜியாவுதீன்ஊடகவியலாளர் முதுவை.ஹிதாயத்துல்லாகவிஞர்.தஞ்சாவூரன்
கவிஞர் ஆதிபழனிகவிஞர் ஜெயராமன் ஆனந்திகவிதாயினி நர்கீஸ் பானு கவிதாயினி ஜெயா பழனிசெல்வி ஆனிஷா ஆகியோருடன் முக்கிய விருந்தினராக ‘காப்பியக்கோ’ கவிஞர் ஜின்னா ஷரிபுத்தீன் ஆகியோரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கவிஞர் ஜின்னா ஷர்புதீன் தமிழ்தேர் சார்பில் பொன்னாடை அணிவித்தார்.  நினைவுப் பரிசினை  தமிழ்த்தேர் தலைவர் கோவிந்தராஜ் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

என்னுடைய பாலைப்பூக்கள்” நூலும் காப்பியக்கோ ஜின்னா ஷர்புதீன்  எழுதிய எல்லாளன் காவியம்’ நூலும் அறிமுகப் படுத்தப் பட்டன.    நூல்களைப்பற்றி நூலாசிரியர்கள் சிறப்புரையாற்றினர்.   
கவிஞர் ஜியாவுதீன் தனது நன்றியுரையாற்றினார்.



அன்று மாலை காப்பியக் கவிஞர் ஜின்னா ஷர்புதீன் அவர்கள் இல்லத்தில் தமிழ்ப்படைப்பாளிகள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் என் இளமைக்கால நண்பர் பத்திரிக்கை புகைப்பட நிபுணர் குளச்சல் இப்ராகிம் அவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு’ – அஜ்மான் அமீரகத்தில்...!
ஜூலை 31-ஆம் தேதி இரவு ‘அஜ்மான் சிவஸ்டார் அரங்கில்’ வைத்து  ‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு.ஹசன் அஹமது அவர்கள் தலைமையில், செல்வி ஆனிஷா மற்றும் செல்வன்.பசிம் பஷீர் ஆகியோரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

கவிஞர்.காவிரிமைந்தன், கவிஞர். திண்டுக்கல் ஜமால், கவிதாயினி நர்கீஸ்பானு ஆகியோர் ‘பாலைப் பூக்கள்’ நூலுக்கு பின்னூட்டம் வழங்கிப் பேசினர். நான் நிறைவாக  நூல்  ஏற்புரை வழங்கினேன்.

‘தமிழ்த்தேர்’ பதிப்பாசிரியர்.கவிஞர். ஜியாவுதீன் வரவேற்புரை வழங்க, ஊடகவியலாளர்  முதுவை. ஹிதாயத்துல்லா முன்னிலை வகித்தார். செல்வன்.பசிம் பஷீருக்கு நன்றியுரை வழங்க வாய்ப்பளித்து சிறப்பித்தனர்.


மனதுக்கும்  நெஞ்சுக்கு நிறைவான இலக்கிய சுற்றுலாவாக இந்தப்பயணம் அமைந்தது. தமிழ் உறவுதான் உறவுகளில் எல்லாம் சிறந்தது என்பதற்கு இந்தப்பயணம் ஒரு சான்று என்றால் அதுமிகையாகாது.

அன்பின் நினைவுகளுடன்,
மஸ்கட் மு.பஷீர் மற்றும்
குடும்பத்தினர்கள்.        




Sunday, July 27, 2014

‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள்! EID MUBARAK TO ALL

‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள்!

நுண்ணறிவுக் கெட்டாத
விண்ணறிவிலும் கிட்டாத

இறைவனின் திகட்டாத
திரைவெண் ணவனருளை

திங்களொரு தினங்களிதில்
பொங்குமிருள் இரவுகளில்

கண்ணீரில் கரைத்திறைந்து
மண்ணிலும் விண்ணிலுமாய்

மகிழ்வெய்தி வாழ்வதற்காய்
முகில்கிழித்து வான்மதியாய்

வந்துசென்றது ‘ரமலான்’
விரிந்தது ‘ஈது’ மலராய் !

அனைவருக்கும் இனிய

‘ஈகைத்திருநாள்’ வாழ்த்துக்கள் !

அன்பன்; மஸ்கட் மு. பஷீர்


Saturday, June 28, 2014

மதிப்பிற்குரிய திரு.கி.வீரமணி அவர்களுடன் சந்திப்பு

 அண்மையில் மஸ்கட் வந்திருந்த மதிப்பிற்குரிய திரு.கி.வீரமணி அவர்களை நண்பர்களுடன் இனிதே சேர்ந்து சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர், பத்திரிக்கையாளார், சமூக ஆர்வலர், தொண்டுப் பணியில் தொடர்ந்து சளைப்பின்றி பணியாற்றிவருபவர், தமிழ் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர், அரசியல் கட்சியின் தலைவர் எனப் பல்முகங்கொண்ட சிறப்புகளுக்கு சொந்தக்காரரான திரு.கி.வீரமணி அவர்களின் சந்திப்பு வெகுநிறைவானதாகவும் பெருமைமிக்கதாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது,

தெளிந்த சிந்தனை வடிவம், கல்விப்பணியில் கடந்து வந்த பாதை, சமுதாயப் பயணத்தில் அவரின் அனுபவம், சமுதாயத்தின் மீதும், தமிழர்கள் மற்றும் தமிழ் மொழிமேல் கொண்ட ஆழ்ந்த பற்று, சிந்தனை மற்றும் அக்கறை என அவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை அப்படியே அள்ளிப்பருகி அமுதுண்ட மகிழ்ச்சி மனத்திலும், இதயத்திலும் நீங்காத நினைவலைகளின் எழுச்சி!.
என்னுடைய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூலைப் பெற்று இருதினங்களிலேயே அதனை மொத்தமும் ஆழ்ந்து படித்து, அதற்கொரு அழகுப் பின்னுட்டமும் தந்து, அதை ‘விடுதலை’ இதழிலேயே பதித்து வெளியிட்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். எத்தனையோ பணிகளுக்கிடையிலும் ஒரு புதுக்கவிஞனை – அதவும் என்போன்ற ஒரு புதிய கவிஞனை கவிஞனைத் தன் தூரிகையால் விமரிசித்து, வாழ்த்தி, மனதாரப் பாராட்டும் அவரின் இதுபோன்ற பண்புதான் அவரை தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் இன்னும் அரசாட்சி செய்ய வைத்திருக்கிறது….வைத்துக் கொண்டிருக்கிறது என் எண்ணுகிறேன்!.
அவரின் தமிழ்ப்பணியும், தொண்டும், கல்விப் பணியும் தொடர வேண்டும், மேன்மேலும் பணிசிறக்கவும் வெற்றிபெறவும் வேண்டும்..அவர் மூலம் தமிழும் தமிழ்ச்சமுதாயமும் ஒளிரவேண்டும்!!
அன்பன்
மஸ்கட். மு. பஷீர்.


Ramadan Wishes : ரமலான் வாழ்த்துக்கள்

ரமலான் பிறை ரம்மியமாய்;
நன்மையின் ஒளி 
இனி வளர்பிறையாய் !

பாவங்கள் எரியட்டும்-இறை
நாமங்கள் துதிக்கட்டும் !
படைத்தவனருள் சொரியட்டும் 

அனைவருக்கும் இனிய
ரமலான் நோன்புகால வாழ்த்துக்கள் !
அன்பன்
மு. பஷீர், மஸ்கட்

  
May this Ramadan bring in you  the 
most brightest and choicest happiness and love 
you have ever wished for.
May lights triumph over darkness.

Wish you a very happy Ramadan Mubarak

Mu. Basheer, Muscat

Sunday, June 15, 2014

விடுதலை இதழில் 'பாலைப் பூக்கள்' கவிதை நூல் பற்றி ஆசிரியர் அய்யா. திரு. கி. வீரமணி அவர்களின் கருத்துப் பின்னூட்டம்.

விடுதலை இதழில் 'பாலைப் பூக்கள்' கவிதை நூல் பற்றி ஆசிரியர் அய்யா. திரு. கி. வீரமணி அவர்களின் கருத்துப் பின்னூட்டம்.

http://www.viduthalai.in/e-paper/82139.html 

ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்குச் சென்று ஒரு நாள் - இடைவெளியில் - தங்கி, சென்னை திரும்பினோம் ஜெர்மனி நாட்டுப் பயணத்தில் (8.6.2014) ஓமான் கடலை நினைத்தால் இன்னமும் மறக்கவே முடியாத வேதனை எம் நெஞ்சத்தில்!

ஆனால் சிறிய அழகான, இயற்கை எழில் கொஞ்சும் நாடு, நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதி), குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதி), பாலையும் மூன்றும் இணைந்த இயற்கைத்தாயின் முக்கூட்டு நாடு அது!

அதன் இயற்கை அழகைக் கண்டு வியந்தோம் அங்கு நமது குடும்ப நண்பர் அதிகாரியாக பணி புரியும் தி.வெங்கடேஷ் - அவரது வாழ்விணையர் சாமுண்டேசுவரி அவர்களும் எங்களை வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். அன்பு உபசரிப்பால் திணற வைத்த அவர்கள், அங்குள்ள தமிழ் உறவுகளில் முக்கிய பொறுப்பாளராகவும், பல்வேறு துறை ஆற்றலாளராகவும், உள்ளவர் களையும் அவர்களது இல்லத்திற்கு அழைத்து ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தினார்கள்.

பல நூற்றுக்கணக்கான இளம் தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ்ச் சொல்லித்தரும் பள்ளிப்பணி முதல் தமிழ்ச் சங்கம் வரை மிக அருமையாக அந்தந்த தமிழர்கள் தொண்டறம் புரிகிறார்கள்.

நம் தமிழர்கள் பலரும் பல்வேறு தொழிலதிபர் களாகவும், அதி காரிகளாகவும், பொறியாளர்களாக வும், மேலாண்மை பொறுப்பாளர் களும் உள்ளனர் என்பது நமது காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது!

அங்கு தமிழ்ச்சங்கத்தை மிகவும் திறம்பட நடத்திவரும் ஜானகி ராமன் தமிழ் இலக்கிய கழகத்தை அமைத்து தவறாமல் சந்தித்து நடத்தி வரும் (குமரி மாவட்டம்) பஷீர் அவர்கள் தலைசிறந்த கவிஞர் இலக்கியப் படைப்பாளியாக உள்ளார் என்பது அவர் தந்த பாலைப்பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் உலகிற்கே பறை சாற்றுகிறது!

தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் என்பது தமிழ்த் தொண்டை விட மிகச்சிறப்பானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ் மண்ணை மறக்காதது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தமிழர்களை கட்சி, ஜாதி, மத பேதமின்றி வரவேற்று வாழ்த்திடவும் தவறாததே. இலக்கிய தமிழ்ப்பண்ணையையும் அங்கே உருவாக்கி, ஒற்றுமை உழைப்பு என்கிற உரமிட்டு உழவாரப் பணிகளையும் செய்திட முன்னணியில் உள்ளனர்.

பாலைவனத்தில் கூட தமிழ்ப்பூக்கள் - பாக்கள் - பூத்துக்குலுங்கும் - புதுமணம் பரப்பும் - புகழ்முடி சேர்க்கும் என்பதற்கு 'பாகவி' பஷீர் அவர்களின் பாலைப்பூக்களே சான்று பகருவதாக உள்ளன. படித்தேன், சுவைத்தேன், கீழே வைக்காமல் படித்து முடித்தேன், எல்லாம் தெவிட்டாத தேன் தான்.

இதோ ஒரு சில பூக்கள் அந்த பூங்கொத்தி லிருந்து - சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன.

கருப்பு நிறம் கொண்ட காகத்தைப்பற்றிய கவிதை வரிகள் சில

காகம் கரைகிறது; கேட்போமா? (பக்கம் 18-19) (ஒரு பகுதி)

...என் மேனியின்
வண்ணத்தால் ஒதுக்கப்படுகிறேன்
தப்பேதான்!
இங்கே!
வர்ணங்களால் பிரிப்பது
வாடிக்கைதானே!
அடுத்து வரம் தருவாய் என்ற தலைப்பில் (பக்கம் 38)

தேய்கின்ற நிலவுக்கு சேதாரம் அகற்று - தருவாய்
பௌர்ணமியில் புல்வெளியில்
பாயிரம் பாடக் காற்று!


வீதியினில் திரிகின்ற

மதயானைகள் மதிபெறட்டும்-அது
வெறி கொண்டால் இரும்புத்
தளை கொண்டு அடங்கட்டும்!


சாதியின் பிரிவினையை

சம்மட்டியால் உடை - அருள்
சோதியின் வடிவே மனிதன் என்போரை
உபசரிக்கட்டும் வாசல் நடை!

இதுபோன்ற கருத்தாழம் மிக்க கவிதை வரிகளில் நல்ல மனித நேயம் மலர்ந்த பாலைப்பூக்கள் என்ற கரு பசுஞ்சோலைப்பாக்கள்! படித்துப் பயன் பெறுங்கள்.

Read more: http://www.viduthalai.in/e-paper/82139.html#ixzz34d99r1en


Monday, May 12, 2014

அன்னையைப் போற்றுவோம் ! ©

அன்னை !
நீ !
தாய்மைக் காலத்தின்
அந்திச் சாயாத
சூரியன் !

முந்தானை அமுதத்தில்
உயிரேற்றினாய் !
உலகம் சீர்போற்ற
உரமேற்றினாய் !

சிசுவாயிருக்கையிலே
செந்தமிழ்ப்
பாலூட்டினாய் !

நீ
செவிமடலில்
அறிவுப் பட்டம் தந்த
பல்கலைக் கழகம் !

ஒரு உடலில்
இரண்டு இதயம்
இயங்காதென யார் சொன்னது !

ஓரே உடலில்
இரண்டு உயிர்களை
சுமக்கும் ஒரே ஜீவன் !

தளராத வீரம் உன்னிடம்
தனிமைப்
பிள்ளைப் பேற்றில் !

தாயே !
இந்த அன்னையர் தினத்தில்
என் அன்பெலாம்
உன் தியாகத்தின்
முன் தெளிக்கிறேன்...
மலர்களாக அல்ல
மனத்தின் ஈரங்களாக !

    --
மஸ்கட் மு. பஷீர் ©

Saturday, March 22, 2014

700 தமிழ்க் குழந்தைகள் படிக்கின்ற தமிழ் வகுப்புக்களை மஸ்கட் தமிழ்ச் சங்கம் நடத்தி வருகிறது: கவிஞர் மஸ்கட்.மு.பஷீர்

செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
மஸ்கட்டில் 700 தமிழ்க் குழந்தைகள் படிக்க வைக்கும் தமிழ்ச் சங்கம்
வியாழன் 20, மார்ச் 2014 1:18:16 PM (IST)
மஸ்கட்டில் 700 தமிழ்க் குழந்தைகள் படிக்கின்ற தமிழ் வகுப்புக்களை மஸ்கட் தமிழ்ச் சங்கம்  நடத்தி வருகிறது என்று கவிஞர் மஸ்கட்.மு.பஷீர் நாகர்கோவிலில் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது; நமது குமரிமாவட்டம் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் தொன்றுதொட்ட பாரம்பரியமும் பண்பாடும் விளையும் பூமியாகும். முதலில் இந்தமண்ணில் பிறந்ததற்காக மனதாரப் பெருமைப்பட்டுக் கொள்கிறேன். எண்ணற்ற தமிழ்ப் பங்களிப்புக்களை இந்த மண்ணில் நமக்குத் தந்துவிட்டுச் சென்ற  நம் முன்னோர்கள், தமிழ்ப் பெரியவர்கள் சுவாசித்து விடும் காற்றை சுவாசிக்கும் பாக்கியம் பெற்றதால்தானோ என்னமோ நானும் இலக்கியப் பணியாற்றும் வாய்ப்பினை பெற்றதுகண்டு மெத்தமகிழ்ச்சி அடைகிறேன். 

பாலைப் பூக்கள் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு. கடந்த பலஆண்டுகளில் என் அனுபவித்தில் விளைந்த கவிதைகள். சமுதாயப் பின்புலத்தில் உருவாகும் எந்த படைப்பும் மக்களைச் சென்றடையும் என்பதற்கு சான்றாக என் இந்தக் கவிதைத்தொகுதியும் அமைந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்.

கவிக்கோ இந்தநூலை நாகர்கோவிலில் வெளியிட முனைவர். இறையன்பு பெற்றுக்கொண்டு மதிப்புரையும் வழங்கினார். கவிக்கோ அவர்கள் அதில் இடம்பெற்ற காகம், கவிதை பற்றிப் பேசிய கருத்தாளமிக்கப் பேச்சு இன்றும் நம் காதுகளில்  ரீங்காரம் செய்வதாக விழாவில் பங்கேற்ற பலர் என்னிடம் இன்றும் நினைவுபடுத்திப் பேசுவது என் நெஞ்சுக்கு நிறைவாக இருக்கிறது. காற்று, மரங்கள், காந்தி எனப் பலக் கவிதைகளைச் சுட்டிக்காட்டி  இறையன்பு தந்த சிறப்புமிக்க மதிப்புரை மிகச்சிறந்த உத்வேகத்தை எனக்கு தந்தது என்றால் அது மிகையாகாது.

என்னுடைய இன்னும் இரண்டு படைப்புக்களை விரைவில் எதிர்பார்க்கலாம். ஒன்று கவிதைத்தொகுப்பு மற்றொன்று கட்டுரைத் தொகுப்பு. வளைகுடாவில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகைகள், பணம் கொழிக்கும் பாலையில் வாழும் மக்களின் மனம் சந்திக்கும் மனநிலையையும் அவர்களைச் சார்ந்து வாழும் இங்குள்ளவர்களின் வாழ்வியல் கூறுகள் போன்றவற்றை ஒரு மனவியல் கண்ணோட்டத்தில் கட்டுரையாக வடிக்கத் தொடங்கியிருக்கிறேன். மற்றொன்று சமுதாயச் சூழல் சார்ந்த கவிதைத் தொகுப்பு.

பேச்சும் எழுத்தும்தான் தமிழ்ப்பணி. பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், சுழலும் சொல்லரங்கம், அரட்டை அரங்கம் எனப் பலமேடைகளை வெளிநாடுகளில் வளைகுடாவில் செய்திருப்பதோடு தமிழ்நாட்டிலும் சிறப்பாகச் செய்துள்ளேன்.  வளைகுடாவில் பலநாடுகளில் வாழ்ந்த நான் தற்போது ஒமான் நாட்டில் மஸ்கட்டில் வாழ்ந்து வருகிறேன். தற்போது மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலராகப் பணியாற்றி வருகிறேன். 

மஸ்கட்டில் 700 தமிழ்க் குழந்தைகள் படிக்கின்ற தமிழ் வகுப்புக்களை, தமிழ்ச்சங்கம் சிறப்பாக நடத்தி வருகிறது. அதனைப் பொறுப்பேற்று நடத்தி வருவது மிகவும் மேன்மையானப் பணியாக வாழ்வில் கருதுகிறேன். சென்னை, தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில்  நடைபெறும் இப்பள்ளி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.  தமிழகத்திலிருந்து சிறந்த இலக்கியவாதிகள், படைப்பாளிகள், கலைஞர்களை அழைத்து மஸ்கட் தமிழர்களுக்காகப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கலைத்துறைக்காக தன்னிகரற்ற சாதனைகள் செய்த தமிழகக் கலைஞர்களை அழைத்து அவர்களுக்கு வாழ்நாள் சாதையாளர் விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறோம். 

எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் அந்த வரிசையில் சென்ற ஆண்டுகளில் விருது பெற்றவர்கள் ஆவார்கள். அதைத் தவிர தமிழர்களுக்கு தேவையான உதவிகளை அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முடிந்தவரை செய்துவருகிறோம். இவ்வாறு கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் தெரிவித்தார்.


டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது