மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Saturday, March 22, 2014

700 தமிழ்க் குழந்தைகள் படிக்கின்ற தமிழ் வகுப்புக்களை மஸ்கட் தமிழ்ச் சங்கம் நடத்தி வருகிறது: கவிஞர் மஸ்கட்.மு.பஷீர்

செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
மஸ்கட்டில் 700 தமிழ்க் குழந்தைகள் படிக்க வைக்கும் தமிழ்ச் சங்கம்
வியாழன் 20, மார்ச் 2014 1:18:16 PM (IST)
மஸ்கட்டில் 700 தமிழ்க் குழந்தைகள் படிக்கின்ற தமிழ் வகுப்புக்களை மஸ்கட் தமிழ்ச் சங்கம்  நடத்தி வருகிறது என்று கவிஞர் மஸ்கட்.மு.பஷீர் நாகர்கோவிலில் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது; நமது குமரிமாவட்டம் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் தொன்றுதொட்ட பாரம்பரியமும் பண்பாடும் விளையும் பூமியாகும். முதலில் இந்தமண்ணில் பிறந்ததற்காக மனதாரப் பெருமைப்பட்டுக் கொள்கிறேன். எண்ணற்ற தமிழ்ப் பங்களிப்புக்களை இந்த மண்ணில் நமக்குத் தந்துவிட்டுச் சென்ற  நம் முன்னோர்கள், தமிழ்ப் பெரியவர்கள் சுவாசித்து விடும் காற்றை சுவாசிக்கும் பாக்கியம் பெற்றதால்தானோ என்னமோ நானும் இலக்கியப் பணியாற்றும் வாய்ப்பினை பெற்றதுகண்டு மெத்தமகிழ்ச்சி அடைகிறேன். 

பாலைப் பூக்கள் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு. கடந்த பலஆண்டுகளில் என் அனுபவித்தில் விளைந்த கவிதைகள். சமுதாயப் பின்புலத்தில் உருவாகும் எந்த படைப்பும் மக்களைச் சென்றடையும் என்பதற்கு சான்றாக என் இந்தக் கவிதைத்தொகுதியும் அமைந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்.

கவிக்கோ இந்தநூலை நாகர்கோவிலில் வெளியிட முனைவர். இறையன்பு பெற்றுக்கொண்டு மதிப்புரையும் வழங்கினார். கவிக்கோ அவர்கள் அதில் இடம்பெற்ற காகம், கவிதை பற்றிப் பேசிய கருத்தாளமிக்கப் பேச்சு இன்றும் நம் காதுகளில்  ரீங்காரம் செய்வதாக விழாவில் பங்கேற்ற பலர் என்னிடம் இன்றும் நினைவுபடுத்திப் பேசுவது என் நெஞ்சுக்கு நிறைவாக இருக்கிறது. காற்று, மரங்கள், காந்தி எனப் பலக் கவிதைகளைச் சுட்டிக்காட்டி  இறையன்பு தந்த சிறப்புமிக்க மதிப்புரை மிகச்சிறந்த உத்வேகத்தை எனக்கு தந்தது என்றால் அது மிகையாகாது.

என்னுடைய இன்னும் இரண்டு படைப்புக்களை விரைவில் எதிர்பார்க்கலாம். ஒன்று கவிதைத்தொகுப்பு மற்றொன்று கட்டுரைத் தொகுப்பு. வளைகுடாவில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகைகள், பணம் கொழிக்கும் பாலையில் வாழும் மக்களின் மனம் சந்திக்கும் மனநிலையையும் அவர்களைச் சார்ந்து வாழும் இங்குள்ளவர்களின் வாழ்வியல் கூறுகள் போன்றவற்றை ஒரு மனவியல் கண்ணோட்டத்தில் கட்டுரையாக வடிக்கத் தொடங்கியிருக்கிறேன். மற்றொன்று சமுதாயச் சூழல் சார்ந்த கவிதைத் தொகுப்பு.

பேச்சும் எழுத்தும்தான் தமிழ்ப்பணி. பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், சுழலும் சொல்லரங்கம், அரட்டை அரங்கம் எனப் பலமேடைகளை வெளிநாடுகளில் வளைகுடாவில் செய்திருப்பதோடு தமிழ்நாட்டிலும் சிறப்பாகச் செய்துள்ளேன்.  வளைகுடாவில் பலநாடுகளில் வாழ்ந்த நான் தற்போது ஒமான் நாட்டில் மஸ்கட்டில் வாழ்ந்து வருகிறேன். தற்போது மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலராகப் பணியாற்றி வருகிறேன். 

மஸ்கட்டில் 700 தமிழ்க் குழந்தைகள் படிக்கின்ற தமிழ் வகுப்புக்களை, தமிழ்ச்சங்கம் சிறப்பாக நடத்தி வருகிறது. அதனைப் பொறுப்பேற்று நடத்தி வருவது மிகவும் மேன்மையானப் பணியாக வாழ்வில் கருதுகிறேன். சென்னை, தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில்  நடைபெறும் இப்பள்ளி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.  தமிழகத்திலிருந்து சிறந்த இலக்கியவாதிகள், படைப்பாளிகள், கலைஞர்களை அழைத்து மஸ்கட் தமிழர்களுக்காகப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கலைத்துறைக்காக தன்னிகரற்ற சாதனைகள் செய்த தமிழகக் கலைஞர்களை அழைத்து அவர்களுக்கு வாழ்நாள் சாதையாளர் விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறோம். 

எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் அந்த வரிசையில் சென்ற ஆண்டுகளில் விருது பெற்றவர்கள் ஆவார்கள். அதைத் தவிர தமிழர்களுக்கு தேவையான உதவிகளை அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முடிந்தவரை செய்துவருகிறோம். இவ்வாறு கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் தெரிவித்தார்.


Saturday, March 8, 2014

மகளிர் தினம் !
போராட்ட வாழ்க்கையினை 
தேரோட்டமாய் இழுத்துச் செல்லும் 
வாழ்வோட்டப் பாதையிலே
தாழ்கொண்டு அடைத்தாலும்
தணியாத சோதனைகள்- தன் 
கண்ணீர்கொண்டு அணைத்திடும் மாண்பு !

பொங்கும் கடல்கூட மகளிர்
பொறுமை கண்டு அஞ்சும் !
சங்கின் நாதமிசை அவரின்
தங்கக்குணம் கண்டு விஞ்சும் !

மங்கையர் விழிகளில் முழுத்
திங்கள் ஒளிப் பிறக்கட்டும்
சங்கடங்கள் நீங்கி இத்தரணி
பொங்குமிசைப் பாடட்டும் !

மங்கையரின் தாயுள்ளமே தரணியில்
மகத்தான பேருள்ளம் !
இந்த நன்நாளில் (மார்ச்-8) என்னை
ஈன்றெடுத்த என் தாய்க்கும் நன்றி !

மங்கையர் வாழ்வில்
மகிழ்ச்சி பொங்கிட வாழ்த்துக்கள் !
வாழ்க மகளிர் தினம் –மனதார
வாழ்த்துவோம் அனுதினம் !

அன்புடன்,
பஷீர் . மு

Friday, February 21, 2014

அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு – மு. பஷீர்

பிப்ருவரி 14, 15 16-ஆம் தேதிகளில் கும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. இந்த இலக்கிய மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஒமான் மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியத் தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள், முன்னணித் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் மற்றும் படைப்பாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

‘திருவினுந்திருவாய்’ மற்றும் ‘ரபியுல் வசந்தம்’ என்ற இஸ்லாமியத் தமிழிலக்கிய இசக் குறுந்தகடுகளை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட ஏஆர் ரஹ்மானின் சகோதரி ஏஆர் ரேகனா பெற்றுக்கொண்டார். நான் (மஸ்கட் மு. பஷீர்) வாழ்த்துரை வழங்கினேன். பிரபல எழுத்தாளர், பேச்சாளர், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


ஆய்வரங்குகள், கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கு, இன்னிசையரங்கு, தமிழறிஞர் கெளரவிப்பு, நூல் வெளியீடு, இசைக் குறுந்தகடுகள் வெளியீடு, இசை, இஸ்லாமிய பாரம்பரிய இசை மற்றும் கலைவடிவங்கள், நிகழ்த்துக் கலைகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. அறிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், இசைமேதைகள் எனப்பலருக்கும் விருதுகள் மற்றும் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தனர்.

சாகித்திய அகடமி விருது பெற்ற படைப்பாளர் ஜே.டி. குருஸ், எழுத்தாளர் அ. மார்க்ஸ், சாத்தான்குளம் அப்துல் ஜபார். பாரதி கிருஷ்ணகுமார் உட்பட முக்கிய தமிழ் இலக்கிய படைப்பாளும், நீதியரசர் கே.என். பாஷா, ஏஆர் ரஹ்மானின் சகோதரி ஏஆர் ரேகனா, இசையமைப்பாளார் ஜிப்ரான், தாஜ்னூர், அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது மற்றும் தமிழ் அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், கவிக்கோ அப்துல்ரஹ்மான் எழுதிய ‘பாலை நிலா’ நூல், ஆய்வுக்கட்டுரை, விழா மலர் உட்படப் பலநூற்களும் வெளியிடப்பட்டன. மாநாட்டில், தமிழகத்தின் முதல் முழுநீள ’சூஃபி இசை நிகழ்ச்சியை’ தாஜ்னூர் பிரம்மாண்டமாக நிகழ்த்தினார்.


இலக்கியத்திலும், இசையிலும் இதயங் குளிர்ந்த மிகச் சிறந்த விழாவாக மூன்று நாள் நிகழ்வும் மனதுக்கு நிறைவானதாக அமைந்தது. தலைவர். கவிக்கோ அப்துல்ரகுமான், நெறியாளார். கேப்டன் அமீர் அலி, செயலாளர்.அப்துல்சமது, பொருளாளர். ஷாஜஹான் மற்றும் கிஸ்வா நிர்வாகத்தினர் சிறம்பட ஆற்றிய பணிகள் மிகப் பாராட்டத்தக்கவை!

Thursday, January 16, 2014

பொங்கல் கவியரங்கம். தலைப்பு: பொங்கட்டும் பொங்கல்
நாள்: 14-1-2014 காலை. மஸ்கட் 'ஸ்பைஸி வில்லேஜ்'
தலைமைக் கவிதை. மு. பஷீர்

‘தை’ மகள் பிறந்தாள் -கவி
‘தை’ மகள் பிறந்தாள்
கவி‘தை’ மகள் பிறந்தாள் !
தமிழ்த்தாயின் கவி‘தை’ மகள் பிறந்தாள் !

தத்‘தை’ அழகுடன்
இத் ’தை’ பிறந்தாள் !
முத்’தை’ சிப்பிக்குள்
வித்’தை’யாய் ஒளிர்ப்பித்து
இத் ‘தை’ பிறந்தாள் !

பச்சைக் கதிர் நாற்றில்
பசியரக்கன் அழிந்திடவே
பிச்சை எனும் சொல்லை
கச்சை கட்டி விரட்டிடவே
இத் ‘தை’ பிறந்தாள் !

வரப்புக்கரைத் தொட்டிலிலே
உறங்கும் கைக்குழந்தை
களையெடுக்கும் தாயின்பாட்டு
குழந்தைக்கு தாலாட்டு !

நிலவுக்கே சென்று
நீந்திப்பேர் பெற்றாலும்
உழவுக்கு சேறு நீந்தும்
உழவனுக்கு நிகரேது !

கலைப்பையோட்டி சேறுடைக்கும்
கதிர்வந்தால் சோறுடைக்கும்
கதிரவன்ஒளி சுட்டெரிக்கும்
காணுமிடமெல்லாம் பயிர்விரிக்கும் !

காளைஎருது துணைநிற்கும்
களத்துமேடு நெல்லறைக்கும்
கண்ணின் மணியாய் நெற்
பொன்மணி நிறைக்கும் !

பட்டகட்டமெல்லாம் அனலில்
சுட்ட பூவாய்க்கருகி
சொட்டும் இன்பமாய் வான்
முட்ட உயர்ந்து நிற்கும் !

பொங்கட்டும் பொங்கல்
தமிழ் மொழிபோல்
திக்கெட்டும்
துலங்கட்டும் பொங்கல் !

வெள்ளலையாய் பொங்கட்டும் இன்பம்
தெள்ளமுதாய் பொங்கட்டும்
கொள்ளளவு குறையாத
கடலளவுச் செல்வம்
சந்ததிக்கும் பொங்கட்டும் !

கற்றோர்க்கும் மற்றோர்க்கும்
உற்றார்க்கும் தோழர்க்கும்
உவகையாய் உதவிட ஈகை
உள்மனமும் பொங்கட்டும் !

தீவினை செய்தோர்க்கும்
நல்வினை செய்யுமனம்
தெய்வம் நீ தருகவென இத்
‘தை’நாளில் வேண்டுகிறோம் !




...... தொடர்ந்தது கவிஞர்களின் கவிதைகள்...
திரு. இரா.அமுதக் கண்ணன், திரு. அஹமதுஜமீல், திருமதி. சுவர்ணா சபரிக்குமார், திருமதி. அல்தாஜ் பேகம், திருமதி. விஜயலக்ஷ்மி மகாலிங்கம், திருமதி. திலகவதி ரத்தினகுமார் கவிமழை பொழிந்தனர்.

.. நிறைவுக் கவிதையுடன் இனிதே கவியரங்கம் நிறைவேறியது!
‘ பொங்கல் விழா’ வில் ‘ பாட்டு மன்றம்’

மாதம் ஒரு சங்ககத்தின் (MOS) சார்பில் 14-ஆம் தேதி பொங்கலன்று சிறப்பாக நடந்தேறிய ‘ பொங்கல் விழா’ வில் ‘மஸ்கட் இலக்கிய வட்டம்’ சார்பில் ‘ பாட்டு மன்றம்’ சிறப்பாக  நடந்தேறியது.

'மக்கள் மனதை பெரிதும் கவர்ந்து நிலைத்து நிற்பது... பழைய பாடல்களா ? புதிய பாடல்களா? என்ற தலைப்பில் நடைபெற்றது. நடுவராக நான் (மு. பஷீர் தான்) அமர்ந்து நடத்திய பாட்டுமன்றத்தில்,  ‘பழைய பாடல்களே’ என்ற அணியில் திரு. அன்வர் அலியும், திருமதி. விஜயலக்ஷ்மி யும் அருமையானப் பாடல்களைப் பாடி வாதாட, ‘புதிய பாடல்களே’ என திருமதி. சுவர்ணா சபரிக்குமரும், திருமதி. ஜானகி கர்ணனும் ஆணித்தரமான வாதத்துடனும், பாடல்களும் பாடி அழகு சேர்த்தனர்.



இறுதியாக நடுவர் தீர்ப்பு இனிமையும், சுவையும், கருத்தாழமும், சமுதாயப் பார்வையும், குடும்ப உறவுமுறைகளின் உந்தமும், இலக்கிய நயமும், அழகு  நடையும் காலத்தையும் கடந்து நிற்பவை புதிய பாடல்களை விடப் பழைய பாடல்களே எனது தனது வாதத்தை பாடல்களையும் பாடித் தீர்ப்பளித்தேன்.
பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அனவரும் சேர்ந்து அழகிய போங்கலை  சமைத்து வழங்கினர். பலவிதமான விளையாட்டுப் போட்டிகளும், டராகம் சங்கமம் குழிவினரின் இனிமையான மெல்லிசைப் பாடல்களும் காதுக்கும் கண்ணுக்கும் விருந்தளித்தன.
காலைக் கவியரங்கம் தமிழ் மணம் பரப்பியது. மதிய உணவு சுவை சேர்த்தது.
தமிழகத்தில் ஒரு பொங்கலைக் கொண்டாடிய மகிழ்வும், தொலைக்காட்சிப் பொங்கலை விட்டு சுவையான சர்க்கரைப் பொங்கலை சுவைத்து மகிழ்ந்த உற்சாகமும் இன்னும், என்றென்றும் இனித்துக் கொண்டேயிருக்கும் !

பொங்கலோ பொங்கல் ! பொங்கிற்று பொங்கல் !

Saturday, November 2, 2013

தீபாவளி வாழ்த்துக்கள் - Diwali Greetings

Dear Friends,
Wish you and all your family members a VERY HAPPY DIWALI.
May this festival of lights light up your life and fill with happiness!
Regards
Basheer & Family

Monday, October 14, 2013

கவிஞர் வாலி...! வாழும் இசையே வாலி !

வாழும் இசையே வாலி !
மு.பஷீர் . மஸ்கட்

வாலிஎனும் இரண்டெழுத்து கவிதைச் சூரியன்
அண்மையில் அஸ்தமித்த செய்திகேட்டு- தமிழ்
அவனியில்  கலங்காத கண்களே இல்லை !
ஐந்து தலைமுறைகளைத் தன் பேனாமையினால் கட்டிப் போட்டவர்.
பதினைந்தாயிரம் பாடல்களை திரையில் தெளித்தவர் !
மறையும் முன்புகூட சமகால  இன்றைய இளைய நடிகர்களுக்காக
இளமைத் ததும்ப இசைப்பாடல்கள் வடித்தவர் ! 
அந்த 82-வயது வாலிபக் கவிஞரின்தமிழ்ப்பணிக்காக மஸ்கட் தமிழ்ச்சங்கம் வாழும் இசையே வாலி அன்றும் இன்றும்என்ற
கரோக்கி மெல்லிசை இரவினைசெப்டம்பர் மாதம் சிறப்பாக நடத்தியது.

அந்த நிகழ்ச்சியின்  நான் வழங்கிய தொகுப்புரையின் சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன் !

கவிஞர் வாலி, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், ஓவியர், எழுத்தாளர்,
நடிகர், இயக்குனர் என பன்முக வடிவம் கொண்டவர் வாலி.

திரைப்பட உலகுக்கு அவர் ஆற்றிய பணியைப் பாராட்டினால்
அதற்கு வார்த்தைகள் மிகையாகாது.

தன்னம்பிக்கை மூலம் தரணியை ஆளலாம் என்பதற்கு
தன்னிகரற்ற உதாரணம்.
   
தலைமுறைகள் பல கடந்தும் தமிழ் விருந்து படைத்தளித்த
கவிப்பெரும் காவியக் கவிஞர் வாலி.

வாலி ஒரு வாலிபக் கவிஞர்..
நண்பர்கள் புடைசூழ ஜாலியாகவே இருக்கும்
பண்பட்ட கவிஞர் !

82 வயதிலும் கவிதை வடம்பிடித்த தமிழ்த் தேரோட்டி
அதனால்தான் திரையுலகமே திரண்டு விழாஎடுத்தது
அவரைப் பாராட்டி !
தமிழ்தாயை அவர் அழகுசெய்தார் சீராட்டி
கவிதை, பாடல் வார்த்தை சீர்ஊட்டி !
தமிழ் மணம் பரப்பினார் சந்தண நீரூற்றி !

வர்ணனைகளின் முதலாளி வாலி
வார்த்தைகளைப் படிமமாக்கிப்
பின்அதை வடிவமாக்கி
கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு
சிறக்கும் வண்ணம் தீட்டியவர்...காரணம்
அவர் ஒரு கவிஞர்... இன்னும் ஓவியர் !

மல்லிகையை மங்கையர் ஆரமாகத் தொடுப்பதுபோல்
வார்த்தைகளை பாடல்களாகச் சரம் தொடுத்தவர்
பாடல்களின் வெற்றிக்கே  உரம் கொடுத்தவர்.

எளிமைக்கு உரித்தானவர்
இதழ் சிரிப்பால் முதுமைக்கே, இளமை சேர்த்தவர் !
கடந்த கால நினைவுகளைச் சுமந்தே வாழ்ந்தவர் வாலி.
82 வயதில் 28 வயது இளமை மனத்துடன் வியக்கும் பாடல் எழுதிய
வாலிபக் கவிஞர்.
வாலியோடு போட்டிபோட்டு
முதுமையடைந்தது
வயதுதானே தவிர
வாலியல்ல !

பாமரனைச் சென்று அடைவதே, சிறந்த இலக்கியம் என்பார் வாலி. அதன்படியே கடைசி வரை தன் பாடல்களை, எழுத்துகளை அமைத்துக்கொண்டார்.
தாய்மீது கவிஞர் கொண்ட அன்பு
தமிழ் உலகுக்கே இவர் சொன்ன பண்பு
தாய் எனும் தலைசிறந்த உறவுமுறையை
தலைமேல் வைத்து எழுதியவர்...
தாயில்லாமல் நானில்லை எனத்
தரணிக்குச் சொன்னவர் நம்மவர். அதைத்
தாரக மந்திரமாய் இசைக்கவும் வைத்தவர் !

ஆண்டவனை நேசித்தபின்
அளவற்று நாம்  நேசிக்கும்
அற்புத உறவுதான் அம்மா எனும் ஜீவ உறவு.

அவரின் அம்மாப் பாடல்கள் கேட்டு
அதிசயப் படாத அன்னையரும் இல்லை...
மனம் கலங்காத மாந்தரும் இல்லை !

அதனால் தானம்மா
அம்மாபற்றிய எண்ணற்ற பாடல்களை
அவர் இயற்றினாரம்மா !
இளமைக் கொஞ்சும்
இன்பம் கெஞ்சும்
காதல் கவிரசம் விஞ்சும்
கற்பனைகள்கூட இவரின்
சொற்புனைவின் திறன்பார்த்து அஞ்சும் !
கவித் திறனுக்கா இவர் பாடலில் பஞ்சம்
கேட்டு என்றென்றும் ரசிக்கட்டுமே நம் நெஞ்சம் !

வாழும் கவிஞராகவே வாலி இன்றும் நம்மோடு வாழ்கிறார்...
என்றும் வாழ்கிறார்.

உடலால் மட்டுமே பிரிந்தாலும் பாட்டால் நம்மோடு நித்தமும்,
பங்காளியாகவே இருக்கிறார் பாட்டுலக மன்னர் வாலி !  நின் புகழ் வாழி !

அன்பன்
மு. பஷீர்










டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது